Sunday, January 8, 2012

சிலுவையில் அறையப்பட்ட பெண்: ஆந்திராவில் பரபரப்பு

ஏசு கிருஸ்து தன்னுடைய கனவில் வந்து சொல்லியதாக, இந்திய மாநிலமான ஆந்திராவில் ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் சிலுவையில் அறையப்பட்ட சம்பவம் மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் குஞ்சான் பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்காயம்மா சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். அதன் பின்பு வெங்காயம்மா தனது பெயரை தேவ குமாரி என்று மாற்றிக்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கனவில் அடிக்கடி ஏசு கிறிஸ்து வருவதாக தேவ குமாரி தனது உறவினர்களிடம் கூறி வந்தார். இதை அறிந்து அப்பகுதி மக்கள் அவரிடம் திரண்டு சென்று ஜெபம் செய்து ஆசி பெற்று வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேவ குமாரி கணவர் மற்றும் சகோதரர்கள் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரிடம் ஏசு கிறிஸ்து தனது கனவில் தோன்றி மகளே நீ என்னிடம் வர விரும்பினால் உன்னை உயிருடன் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தாலும் தேவகுமாரி சிலுவையில் அறைய வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால் கணவர், சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேவகுமாரியை வெள்ளிக் கிழமை அன்று ஏசு கிறிஸ்து போல் சிலுவையில் அறைய திட்டமிட்டனர். தேவகுமாரி சிலுவையில் அறையப்படும் சம்பவம் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் குஞ்சான் பள்ளி கிராமத்தில் திரண்டனர். தேவகுமாரி ஏசு கிறிஸ்து போல் வெள்ளை உடை, சிகப்பு சால்வை அணிந்து சிறிது நேரம் சிலுவை முன்பு நின்று பைபிள் வசனங்களை வாசித்து அங்கு திரண்டிருந்த மக்களிடம் போதனை செய்துள்ளார். இதையடுத்து தேவகுமாரியை கணவரும் சகோதரர்களும் சிலுவையின் மீது படுக்க வைத்து இடது கையில் ஆணி அறைந்தனர். அப்போது ரத்தம் கொட்டினாலும் தேவகுமாரி துடிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் அவரது இரு கைகளையும் கயிற்றால் கட்டி சிலுவையை தூக்கி நிறுத்தினர். ஏசு கிறிஸ்துவுக்கு அணி விக்கப்பட்டது போல் தேவ குமாரிக்கும் முள் கிரீடம் தலையில் சூட்டப்பட்டது. சிலர் தங்களது செல்போன்களில் இதை ஆர்வமாக படம் பிடித்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்ததும் அங்குள்ள காவல்துறை துணை மேலாளர் கோடீஸ்வர ராவ் மற்றும் பொலிசார் விரைந்து சென்றுள்ளனர். பின்னர் சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு தொங்க விடப்பட்டிருந்த தேவ குமாரியை கீழே இறக்கி அங்குள்ள தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் சிலுவையில் அறைந்த கணவர் பிரான்சிஸ், சகோதரர்கள் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரை பொலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment