Saturday, December 24, 2011

'உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழகத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள்'

புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தயாரிப்பில் உருவான 'உச்சிதனை முகர்ந்தால் ' திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படுவதில் பல சிக்கல்கள் எதிர் கொள்வதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலையின் தேவையினை உணர்த்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் தொடர்பாகவும் மிகவும் அழுத்தம் திருத்தமாக படமாகியுள்ள 'உச்சிதனை முகர்ந்தால்' தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஈழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய கொடூரக் கொலைகள், பாடசாலை மீதான விமானத் தாக்குதல்கள், தமிழ் இளைஞர்களின் கண்களைக் கட்டி பிரடியில் சுடுவது போன்ற காட்சிகளும் ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் எழுதப்பட்ட 'இருப்பாய் தமிழாய் நெருப்பாய் நீ! இழிவாய் கிடக்க செருப்பா நீ!' என்ற உணர்ச்சி ததும்பும் பாடல் வரிகளும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் தேசியத்தலைவர் அவர்களின் தம்பி என்றும் தன்னைக் கூறி ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பில் தமிழகத்தில் உரத்து குரல் கொடுத்த சீமானும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். இதுபோன்ற காரணங்களால் தமிழகத்தில் உள்ள பல தொலைக்காட்ச்சி நிறுவனங்களும் பத்திரிகைகளும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படச் செய்திகள் எதனையும் வெளியிடாது இருட்டடிப்பு செய்வதோடு இவர்களது கட்டணம் செலுத்திய விளம்பரங்களைக் கூட பிரசுரிக்க மறுத்துவருகின்றனர். அதனையும் தாண்டி சென்னை தவிர்ந்த பிற இடங்களில் திரையரங்குகளை பெறுவது கூட கடினமாக உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணமாக உணாச்சியுள்ள கிராமப்புற மக்களிடம் இது போன்ற விடயங்கள் சென்றடைவதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இவ்வாறான முட்டுக்கட்டைகளின் பின்னால் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment