Saturday, March 5, 2011

அரசியலில் குதிப்பாரா வடிவேலு?


தன்னை இன்னொரு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அதிமுக ஏற்றுக்கொள்கிறதா? என்று விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பது பற்றி காமெடி நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சிலபல மாதங்களுக்கு முன்பு, நடிகர் வடிவேலுவுக்கும், தேமுதிகவை சேர்ந்த பிரமுகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வடிவேலுவின் வீடு மீது கல்வீச்சு தாக்குதலும் நடந்தது.
இதையடுத்து ஆவேசமடைந்த வடிவேலு போலீசில் விஜயகாந்த் மீது புகார் அளித்ததுடன், அடுத்த தேர்தலில் விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவேன், என்று கூறியிருந்தார்.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், விஜயகாந்த் அதிமுகவுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் இருக்கிறார். விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சொன்ன நடிகர் வடிவேலு என்ன செய்யப்போகிறார்? அவர் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவாரா? என்பதையும் பரபரப்பான அரசியலுக்கிடையே சிலர் எதிர்பாத்து காத்திருக்கிறார்கள்.

இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டால் தீர்க்கமான முடிவை தெரிவிக்காமல் மழுப்பி விட்டார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள்.

எம்.ஜி.ஆரின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். கலைஞரின் அறிவும், ஆற்றலும், அயராத உழைப்பும் எனக்கு பிடிக்கும். அவருடைய நிர்வாக திறன் பிடிக்கும். என்றாலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்கிறதா? அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தபின், விஜயகாந்தை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிடுவேனா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன், என்று கூறியிருக்கிறார் வடிவேலு.

No comments:

Post a Comment