Friday, April 6, 2012

பழிக்கு பழி வாங்கும் இலங்கை..! எண்ணெய் நிறுவன (IOC) ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏற்பாடு!

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (IOC) செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பழிதீர்க்கும் நோக்கில் இந்தியாவிற்கிடையிலான வர்த்தக உறவுகளில் இடைவெளியை அதிகரித்துக் கொள்வதற்கு மகிந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கமையேவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக மோட்டார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளது. சிறிய ரக வாகனங்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட போதிலும், இந்தியாவைத் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படவில்லை. இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டதன்மூலம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ”மாருதி” வாகனம், ”டாட்டா நெனோ” மோட்டார் வாகனம் ஆகியவற்றின் விலை 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளது. இந்த வாகனங்கள் தற்போது 16 முதல் 17 லட்சம் ரூபா வரையில் விற்பனையாகிறது. இதனைத்தவிர முச்சக்கர வண்டியொன்றின் விலை ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரையில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விலை 80 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விசேட அம்சம் என்னவெனில், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு வாகனத்திற்கும் வரி அதிகரிக்கப்படவில்லை. இதில் மற்றுமொரு கட்டமாக இந்திய ஒயில் நிறுவனத்திற்கு (IOC) குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள திருகோணமலை துறைமுக எண்ணெய்க் குதங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கோரப்பட்டுள்ளன. எண்ணெய்வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதுகுறித்து கருத்துதெரிவிக்கும்போது, இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதற்கான அதிகாரம் இலங்கை எண்ணெய்வளத்துறை நிறுவனத்திற்கு இல்லை எனவும் இதற்கான அதிகாரம் திறைசேரியிடமே இருப்பதாகவும் கூறியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில், ஏப்ரல் 08ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை புதுடில்லியில் ‘South Asian Political Research Institute – SAPRI’ என்ற மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு முடிவடைந்த பின்னர் மகிந்த அரசாங்கத்தின் இந்தியா மீதான பழிதீர்க்கும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன், குறித்த இந்திய மாநாட்டில் கலந்துகொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, மங்கள சமரவீர, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையொன்றைத் தாக்கல் செய்யுமாறும் மகிந்த ராஜபக்‌ஷ அரச புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment