Tuesday, August 30, 2011

ஜனாதிபதி நிராகரித்த பிறகு தூக்கு தண்டனையை நிறுத்த முடியாது; “சோ”


ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து இனி காப்பாற்ற முடியுமா? முடியாதா? என்ற சர்ச்சை வலுத்து வருகிறது. இதுபற்றி எழுத்தாளர் “சோ”விடம் கருத்து கேட்ட போது, அவர் கூறியதாவது:

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தப்பிறகு மீண்டும் அதில் தலையிட மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. இதை தவிர சில விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே மாநில அரசு, இந்த கருணை மனுவை நிராகரித்துள்ளது. அது கலைஞர் அரசு செய்த காரியம். இப்போது ஜனாதிபதி நிராகரித்த நிலையில் மாநில அரசு அதில் தலையிட முடியாது.

கேள்வி:- கேரளா, ஆந்திராவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தப்பிறகும் மத்திய அரசு மூலம் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்:- நீங்கள் சுட்டிக் காட்டுக்கிற ராமதாசின் பேச்சிலேயே கூட ஜனாதிபதி நிராகரித்தப்பிறகு மாநில அரசு கருணை மனுவை ஏற்றதாக சொல்லப்படவில்லை. மீண்டும் மத்திய அரசுதான் பரிசீலனை செய்ததாக அவர் சொல்லி உள்ளார். இந்த நிலையில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இந்த பேச்சிலும் உறுதியாகிறது.

கே:- இனி 3 பேரையும் காப்பாற்ற வழி இருப்பதாக தெரிகிறதா?

ப:- மரண தண்டனையையே இனி கிடையாது என்றால்தான் இதுவும் நிற்கலாம்.

இவ்வாறு “சோ” கூறினார்.

ஐகோர்ட்டு வக்கீல் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

திட்டமிட்டு மற்றும் மனி தாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட கொலை குற்ற வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து தூக்கு தண்டனையை உறுதி செய்து ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்த பிறகு அந்த தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ கிடையாது. சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்த பிறகு மீண்டும் மறுபரிசீலனை செய்ய முடியாது.

வேண்டுமென்றால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட விதம், கையாளப்பட்ட வழிமுறைகள் தவறு என்று வாதிடலாம். அதுபற்றி கோர்ட்டும் விளக்கம் கேட்க வாய்ப்பு உண்டு. இதனால் தண்டனையை நிறைவேற்றும் காலம் வேண்டுமென்றால் தள்ளிப்போகலாம். ஆனால் தண்டனையை குறைக்கவோ, ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை. இருந்தாலும் சில வழக்கு களில் தண்டனை குறைக்கப்பட்டும் உள்ளது.

1990-ல் உ.பி.யைச் சேர்ந்த ஜும்மான்கான் என்பவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்ட னையை உறுதி செய்தது. அவர் அனுப்பிய கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லாத காலதாமதம் ஏற்பட்டு இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதேபோல் 1991-ல் தயாசிங் என்பவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்ட னையை உறுதி செய்தது. அவர் போட்ட முதல் கருணை மனு தள்ளுபடி ஆனது.

2-வது கருணை மனு மீது 2 வருடமாக நடவடிக்கை எடுக்கவில்லை. முதல் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை வைத்து தயாசிங்கை தூக்கில் போட்டி ருக்கலாம். அனால் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் டில் மனுதாக்கல் செய்து கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. கருணை மனு கால தாமதம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை குறைத்து விடாது. காலதாதம், குற்றத்தின் தன்மையையும் பரிசீலித்து முடிவு செய்யும்.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-

கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகி யோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறுத்த முடியாது. இதை தடுத்து நிறுத்த அரசியல் சட்டப்படி யாருக்கும் அதிகாரம் கிடையாது. இந்த விஷயத்தில் முதல்- அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து மிகவும் சரியானது. இந்த பிரச்சினை மீதான அரசியல் சட்ட நிலையை அவர் சரியாக புரிந்து விளக்கி உள்ளார்.

நளினிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைப்பு சட்ட விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தில் இது மோசமானது. எனவே, சட் டத்தில் மேற்கொண்டு யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது. 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை வருகிற 9-ந்தேதி நிறைவேற்றப்பட வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல் கொண்ட நமது நாடு, மென்மையான போக்கை கடைப்பிடிக்காது என்பதை உணர்த்த வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment