Wednesday, February 23, 2011
நாகையில் கடும் மழை: இருந்தும் விஜய் ரசிகர்கள் குவிவு!
பலத்த மழை, சூறைக்காற்றுக்கு நடுவே கிட்டத்தட்ட `சினிமா எஃபெக்டில்` துவங்குகிறது விஜய்யின் முதல் அரசியல் கூட்டம் மற்றும் போராட்டம். தமிழக மீனவர்களை தொடர்ந்து சிங்கள கடற்படை தாக்குவதைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை விஜய் அறிவித்தார். திட்டமிட்டபடி எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்தது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வாகனங்களில் திரள ஆரம்பித்த ரசிகர்களுக்கு சோதனையாக அமைந்துவிட்டது சூறைக்காற்றும் மழையும். நேற்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை நாகையையும் விட்டுவைக்கவில்லை. போராட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இன்னொரு பக்கம் கடுமையான காற்று மேடையைப் பதம் பார்த்து வருகிறது.
அறிவித்தபடி 4 மணிக்குத் துவங்கியிருக்க வேண்டும் இந்த ஆர்ப்பாட்டம். ஆனால் மழை - காற்று காரணமாக தாமதம் ஆகி வருகிறது. மழைக்கு ஒதுங்க இடமில்லாமலும், அதே நேரம் விஜய்யைப் பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்தவும் முடியாமல் சிதறி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். சரியாக 8 மணிக்குப் பேசுவார் விஜய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் மழை அடங்கி, காற்றும் நின்றுவிட்டால் போதும் என்று வருண பகவானை வேண்டி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்!
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் முதல் அடியாக இது பார்க்கப்படுவதாலும், அதிமுக ஆதரவு கொடுத்திருப்பதாலும், தேர்தல் சமயம் என்பதாலும் இந்த போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் ரசிகர்களோடு அதிமுகவினரும் பெரும் திரளாக கலந்து கொள்ளவுள்ளதால் கூட்டம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல லட்சம் பேரை இக்கூட்டத்திற்கும், போராட்டத்திற்கும் திரட்ட விஜய் தரப்பு தீவிரமாக உள்ளது. இதன் பொருட்டே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்தே விஜய் போராட்டத்திற்கு அதிமுக தனது ஆதரவை அளித்தது.
போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையையும், நிவாரண உதவிகளையும், நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார் விஜய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment