Monday, April 9, 2012

நெருக்குகிறது ஐ.நா.! மூச்சுத் திணறுகிறது இலங்கை!!

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐ.நாவின் பங்கு பணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத் தகவலை ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம் வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் தொலைபேசி வழியாக அளித்துள்ள செவ்வி ஒன்றில், நம்பகமான வட்டாரங்கள் மூலம் தமக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்த மீளாய்வை மேற்கொள்வதற்காக தொராயா ஒபெய்ட் என்ற ஐ.நாவின் மூத்த அதிகாரி ஒருவரை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் ஏற்கனவே நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள, நாடுகளின் மனிதஉரிமைகள் நிலவரம் தொடர்பாக ஆராயும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சிறிலங்கா தொடர்பாக 3 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் தாமரா குணநாயகம் கூறியுள்ளார். அத்துடன், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்தமாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில், ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஐ.நா அதிகாரிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, தொடர்பாக இந்த அறிக்கையில் சிறிலங்கா மீது குறை கூறப்படும் சாத்தியம் உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment