Saturday, March 31, 2012

3 (மூன்று)

கொலவெறிப் பாடல் ரிலீஸான சமயத்திலேயே இந்த 3 படத்தை பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் போய் பார்க்கக் கூடாதென்று முடிவெடுத்துவிட்டேன்.தியேட்டரில் நல்ல கூட்டத்துடன் கியூவில் நின்று படம் பார்க்கும் அனுபவமே தனி. இன்று காலை ஒரு பி செண்டர் தியேட்டரில் நண்பகல் 12 மணி காட்சிக்காக 11 மணிக்கே போய் நின்றேன். பெரிய கூட்டம் இல்லையென்றாலும் நேரம் ஆக ஆக ஹவுஸ்ஃபுல் ஆகும் அறிகுறி தெரிந்தது. எல்லாம் +2, கல்லூரி மாணவ,மாணவிகள். 25 ரூபாய் டிக்கட்டை கவுண்டரிலேயே 100 ரூபாய்க்கு விற்கிறார்கள். அந்தக்கொள்ளை போதாதென்று டூ வீலர் பார்க்கிங் 20 ரூபாய். இப்படிப்பட்ட எரிச்சலான மனநிலையில் உள்ளே போவதால்தான் சுமாரான படங்களைக் கூட மக்கள் மொக்கைப்படம்டா போயிடாத என்று மெஸேஜ் அனுப்புகிறார்கள். குப்புற விழுந்துகிடக்கும் தமிழ்சினிமாவை தூக்கி நிறுத்த விரும்பும் புண்ணியவான்கள் தங்கள் பணியை இந்த மாதிரியான தியேட்டர்களிலிருந்து தொடங்கவேண்டும் என்பது அடியேனின் ஆசை. ***************** இருவீட்டாரும் திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், காதலர்கள் எங்கே போய் தாலி கட்டிக்கொள்ளலாம் ? 3 பட டிஸ்கசனில், அறிமுக இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கேள்வி. ரிஜிஸ்தர் ஆபீஸ் மேடம் இது ரொம்ப பழைய ஸ்டைல்பா... குலதெய்வம் கோயில்ல மேடம்.. அப்பிடி பல தெய்வத்தைப் படங்கள்ல பாத்தாச்சி. வேற ஏதாவது இண்ட்ரஸ்டிங்கா... கல்ச்சர் ஷாக் குடுக்குற மாதிரி ? அப்ப நாம குடிகாரங்க கூத்தடிக்கிற டிஸ்கொத்தே பார்ல தான் மேடம் வைக்கணும் சூப்பர் .. நாம நம்ம கதையில தனுஷுக்கும்,ஸ்ருதிக்கும் நடக்கிற கல்யாணத்தை பார்ல தான் வக்கிறோம். தமிழனுக்கு கல்ச்சர் ஷாக் குடுக்கிறோம். இதற்கு முன்பு செல்வராகவன் வகையறாக்கள் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்டிலேயே தமிழர்கள் தவித்து தண்ணி குடித்தது போதாதென்று, இப்போது அந்த குடும்பத்து மருமகளான ஐஸ்வர்யா மேற்படி திருமண காட்சியை ஒரு வடம் சைஸில் தாலி செய்து, டிஸ்கொத்தே பாரில்தான் அரங்கேற்றியிருக்கிறார்.மாப்பிள்ளையும் பொண்ணும் பீர் கிளாஸை கையில் வைத்துக்கொண்டு சியர்ஸ் சொன்னபடியே தாலிகட்டிக்கொள்கிறார்கள். சரி,3 கதைக்கு வருவோம். +2 படிக்கும்போது, ஒரு மழைநாளில்,சைக்கிள் செயினை மாட்டி உதவப்போகும் வேளையில், முதல் பார்வையிலேயே ஸ்ருதி மீது காதல்கொள்கிறார் தனுஷ். சரி,நம்மள மாதிரி பெரிய இடத்துப்பிள்ளையாச்சே என்று பெரும் எதிர்ப்பு காட்டாமல் ஸ்ருதி சம்மதிக்க, கொஞ்ச காலம் காதலித்து, அப்புறம் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள். வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும்போதே, ஸ்ருதியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கிறார் தனுஷ். அப்புறம் க்ளைமேக்ஸ் நெருங்கும் வேளையில், நம்மை டைரக்டர் ஐஸ்வர்யா டார்ச்சர் பண்ணுவது போல், பச்சைக்கலரில் நாலைந்து உருவங்கள் தொடர்ந்து வந்து டார்ச்சர் கொடுக்கவே, தாங்க முடியாத வெறிகொண்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொல்கிறார் தனுஷ். நடுவில் நடந்தது என்ன வெண் திரையில் பாருங்கள்.. படத்தின் முதல் காட்சியிலேயே, தனுஷின் சடலத்துக்கு எல்லோரும் மாலை போட்டுக்கொண்டு போவது போல் காட்டியதாலோ என்னவோ, படத்துக்கு பாடை கட்டும் ஒருவித ஃபீலிங் அங்கிருந்தே துவங்கி விடுகிறது. ஆனால் அதற்காக ஐஸ்வர்யாவை ஒரேயடியாக மொக்கை டைரக்டர் என்று சொல்லிவிடமுடியவில்லை. படத்தின் முதல் பாதியில் வரும் சில காதல் காட்சிகள், அக்காவின் காதலுக்கு எப்போதுமே கட்டை விரலை ரெடியாக தூக்கி காத்திருக்கும் குட்டி ஊமைத்தங்கச்சி, அதிலும் அவள் அக்காவின் காதலுக்கு ஓ.கே.சொல்லச்சொல்லி, அப்பாவிடம் முதல் முறையாக பேச ஆரம்பிக்கும் காட்சி என்று சில இடங்களில் தேர்ந்த டைரக்டருக்கான முத்திரைகள் பதித்திருக்கிறார். ஆனால் இடைவேளைக்கு அப்புறம் தனுஷுக்கு யாருக்கும் தெரியாத மூனாவது ஒன்று இருக்கிறது என்று ஆரம்பித்து தனுஷையும், நம்மையும் ஒரே சமயத்தில் அந்த ஷொபியோபொபிஅயுமேனியா நோய்க்கு உட்படுத்தி இம்சிக்க ஆரம்பித்துவிடுகிறார். நடிப்பு என்று வரும்போது தனுஷ் ஒவ்வொரு படத்திலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து போவதற்கு,பல காட்சிகள் சாட்சிகளாகின்றன.ஸ்ருதியையும் சும்மா சொல்லிவிடமுடியாது. ஆனால் அவர் பேசும் தமிழ் சதா மப்பில் இருப்பது போலவே ஒரு மனப்பிராந்தி. இவர்கள் இருவரையும் ஜோடிகளாகப் பார்க்கும்போது, அவர்கள் காட்டும் நெருக்கத்தில் கெமிஷ்ட்ரி,ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாமே நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகிறது. தனுஷின் நண்பர்களாக வரும் சிவகார்த்திகேயனும்,சுந்தரும் சரக்குக்கு ஏத்த சைடிஷ்கள். முதல் பாதியில் மட்டும் வந்து தனுஷை தொடர்ந்து லந்து தரும் சிவகார்த்திகேயன் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.தனுஷின் இம்சைக்காக டுடேரியல் காலேஜில் போய் அமர்ந்து கொண்டு,டேய் மச்சான் அவன் படிக்கிறாண்டா என்று அதிச்சி அடைவதும்,... தனுஷ்,ஸ்ருதி நேத்து எனக்கு திடீர்னு முத்தம் குடுத்துட்டு ஓடிபோயிட்டாடா என்றவுடன் எவன் கூட? என்று கவுண்டர் அடிப்பதும் சிவகார்த்திகேய ஸ்பெஷல்கள். தனுசுக்காக படம் முழுக்க விவஸ்தையற்ற பல அவஸ்தைகளை சந்திக்கும் சுந்தர், போதையிலும் சரி, சும்மா இருக்கும்போதும் சரி, தனுஷைப்பார்த்து சுமார் 100 முறையாவது மச்சான் பேசாம ஆஸ்பத்திரில சேர்ந்துரலாம் மச்சான் என்கிறார். ஆனால் அதை ஏன் தனுஷ் அலட்சியம் செய்கிறார் ? ஒருவேளை அப்படி தனுஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டால், கதைக்கு எங்கே போவது என்று கன்ஃபியூஸ் ஆகிவிட்டாரோ டைரக்டர் . வொய் திஸ் கொலவெறி தவிர்த்த படத்தின் மற்ற பாடல்களும், பின்னணி இசையும்,சத்தியமா நான் ஒன் சாங் ஒண்டர் தானுங்கண்ணா என்று அனிருத்தை பக்காவாக பறை சாற்றுகின்றன. ஸ்கூல் காட்சிகளில் ஒளிப்பதிவும் கூட கொஞ்சம் சின்னப்புள்ளத்தனமா இருக்கட்டும் என்று வேண்டுமென்றே செய்தாரோ என்னவோ, இடைவேளைக்குப்பிறகு படு மெச்சூரிட்டியான பதிவு வேல்ராஜுவுடையது. நாட்டில் சைக்கோக்கள் அதிகமாகிவிட்டார்கள் என்பதற்காக எதற்கெடுத்தாலும் எங்களைப்பற்றியே படமெடுப்பதை நாங்கள் விரும்புவதில்லை தனுஷ், ஐஸ்வர்யா அவர்களே! ****************************** 3 பின்குறிப்புகள் ; உங்களையும் என்னையும் விட தனுஷ் ரொம்பவே புத்திசாலி, மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தான் நடிப்பது இதுவே கடைசி என்று அவர் அறிவித்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2.மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்று ரகஸியமாகப்பார்ப்பதற்காக இன்று அனிருத், ஒரு தியேட்டருக்கு தனியாகப் போனாராம். கான்வெண்ட் படிக்கிற பசங்கள்லாம் தனியா நாட் அல்லவுட் என்று தியேட்டர் நிர்வாகம் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டதாம். 1.ஆளாளுக்கு ரொம்ப கிண்டல் பண்றாங்க என்பதால்,இனி சுண்டல் விக்கிறவனாக்கூட நடிக்கத்தயார் ஆனா அடுத்து ஒரு பத்து வருஷத்துக்கு மெண்டலா மட்டும் நடிக்க யாரும் என்னைக்கூப்புடாதீங்க என்று மத்தியான வெயிலில் மரினா பீச்சிலிருந்து கத்த வேண்டும் போல இருக்கிறதாம் தனுஷுக்கு..

1 comment:

  1. இந்த பதிவு காப்பி பண்ணியது போல இருக்கே....

    ReplyDelete