Friday, February 3, 2012

ஹிலாரியால் கலங்கிய இலங்கை! ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதா இல்லையா என்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என்று கூறியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டிலேயே சிறிலங்காவின் பதில் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா சர்ச்சைக்குரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஏற்கனவே வெளியாகி விட்டது அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை உலகமே அறியும். இந்தநிலையில் இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமா என்பது குறித்து அரசாங்கம் ஆராயும்.“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்தவாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரத்தைக் கையாளும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர், ஆணைக்குழுவின் அறிக்கை ஜெனிவாவில் ஒருபோதும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தனர். அதற்கு முரணான வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அறிவித்திருப்பது சிறிலங்காவைப் பெரிதும் கலக்கத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து அமெரிக்கா நீண்டகாலமாக கோரி வரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கும் நிலை உருவாகி வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment