Wednesday, January 25, 2012

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கலவரம்! காயமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு! 2பேரின் நிலை கவலைக்கிடம்! (படங்கள் இணைப்பு)

புதிய மகசின் சிறைச்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 4பேர் உட்பட 28பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த மோதல் சம்பவத்தின் போது சிறைச்சாலையிலுள்ள பதிவேடுகள் அறைஇ சிறைக்கைதிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் விசேட பொலிஸார்இ இராணுவத்தினரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். இந்த மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, புதிய மகசின் சிறைச்சாலைக்குள் சுமார் 1800 சிறைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், போதைப்பொருள் விவகாரங்களால் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களாவர். இவர்கள் மத்தியில் இப்பொழுதும் போதைப் பொருள் பாவனை இருந்து வருகிறது. கைதிகள் மத்தியில் போதைப் பொருட் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் முகமாக புதிய ஒழுங்குவிதிகளை சிறைச்சாலை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஒழுங்கு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை 11.10 மணியளவில் சிறைக்கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதாதைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இவர்களைக் கட்டுப்படுத்த முயற்சித்த அதிகாரிகள் மீது மேற்படி கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், மற்றும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் அதிகாரிகள் நால்வர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் காணப்பட்ட பழமைவாய்ந்த கட்டிடமொன்று தற்போது உடைக்கப்பட்டு வருகின்றது. அக்கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்ட செங்கற்களால் மேற்படி சிறைக்கைதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். (அவ்வாறு அவர்கள் தாக்கிய செங்கற்களின் சிதைவுகள் சிறைச்சாலைக்கு வெளியே பிரதான வீதியிலும் சிதறிக்கிடப்பதைக் காணக்கூடியதாக இருந்தது) இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக விசேட பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் அதிரடிப்படையினர், கலகமடக்கும் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் என சிறைச்சாலை வளாகத்துக்குள் குவிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் மீது சிறைக்கைதிகள் தாக்குதல்களை நடத்தினர். இந்நிலையில், சிறைக்கைதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பாதுகாப்பு தரப்பினரால் கண்ணீர்ப் புகைக்குண்டு பிரயோகமும் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. கண்ணீர்ப் புகைக்குண்டு பிரயோகத்தினால் சிறைக்கைதிகள் மாத்திரமன்றி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்டனர். இந்த மோதல் சம்பவத்தினால் சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் உட்பட 28பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவத்தின் போது மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 180 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மோதலின் போது அவர்கள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்திலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். அத்துடன், பாதுகாப்பு தரப்பினரால் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment