Sunday, March 6, 2011

எரிந்து சாம்பலான ஸ்லம்டோக் மில்லியனரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரூபினா அலியின் வீடு!


உலக அளவில் பேசப்பட்ட ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்தில் நடித்த சிறுவர் நட்சத்திரமான ரூபினா அலி வாழ்ந்து வந்த மும்பை நகரின் சேரிப்பகுதியில் நேற்றிரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் ரூபினாவின் வீடும் எரிந்து சாம்பலானது. டெனிபோயலின் இயக்கத்தில் உருவான சிலம்டோக் மில்லியனர் 2008ல் ஒஸ்கார் விருதுகள் பலவற்றை வென்று சாதனைப் படைத்த திரைப்படமாகும்.

இதில் லத்திகா என்ற கதாநாயகியின் சிறு வயதுப் பாத்திரத்தில் தோன்றியவர் தான் ரூபினா அலி.இந்தத் திரைப்படம் பற்றிய பல்வேறு பத்திரிகை நறுக்குகள், புகைப்படங்கள் என்பன உட்பட பல நினைவுப் பொருள்கள் இந்தத் தீயில் முற்றாக அழிந்துபோய்விட்டன.



வீடு பற்றி எரிந்தபோது ரூபினா செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார். அவர் தற்போது எல்லாவற்றையும் இழந்துள்ளார். மும்பை நகரின் பந்த்ரா ரயில் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த சேரிக்குடியிருப்பு எரிந்ததில் 500 குடிசைகள் சாம்பலாயின

என்னுடைய வீட்டோடு சேர்த்து திரைப்படம் பற்றிய எனது நினைவுகள், புதிய பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள், என எல்லாமே அழிந்துபோய்விட்டன.

ஆனால் இந்தப் பாரிய தீ உயிர்கள் எதையும் காவு கொள்ளாமை ஒரு வகையில் ஆறுதல் அளிக்கின்றது என்று ரூபினா கூறினார்.


எவ்வாறாயினும் ஐந்துபேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப் படுகின்றது. இந்தப் பகுதியில் நேற்று கடும் காற்றும் வீசிக் கொண்டிருந்ததால் தீ கட்டுக் கடங்காமல் பரவியது.

25 தீயணைப்பு இயந்திரங்களின் துணையோடு தீ அணைக்கப்பட்டது. ஸ்லம்டோக் மில்லியனர் படத்தின் சிறுவர் நட்சத்திரங்களுக்கு வீடுகள் வாங்கிக் கொடுக்கப்படும் என்று திரைப்பட இயக்குனர் உறுதியளித்திருந்தார்.



ஆனால் இந்த உறுதி வழங்கப்பட்டு ஒரு வருடமாகியும் அது நிறைவேற்றப்படவில்லை

No comments:

Post a Comment