Sunday, March 13, 2011

நண்பர்களிடையே காதல் பூப்பதற்கான காரணங்கள்? - இதோ சில சுவாரஸ்யங்கள்


ஆண் தோழன், பெண் தோழி என்ற வித்தியாசங்கள் கடந்து, நட்பு என்ற வட்டத்தின் எல்லை கடக்கத் தூண்டும் பதின்பருவத் தீண்டல்கள். விரும்பியவர்களிடத்தில் மனம் சில விதிகளை மீற விரும்பும். எதிர்பாலின நட்பில் மட்டும் மனம் ஆயிரம் ஜாலம் காட்டும்.
நட்புக்கும் காதலுக்கும் எது எல்லைக் கோடு? எதைக் கடந்தால் காதல்? உறக்கம் தொலைக்கவைக்கும் உணர்வை, உறவை, உளவியலைப் பற்றிச் உளவியல் நிபுணர்கள் என்ன சொல்கின்றார்களெனில், ”இவையிவைதான் நட்பின் கட்டுப்பாடுகள் அல்லது எல்லைக் கோடுகள்’ என்று ஆண்-பெண் உறவைத் தெளிவாக வரையறுக்க முடியாது.
பலருக்கு நட்பும் காதலும் பாலும் நீரும் போலக் கலந்திருப்பதால் குழப்பத்திலேயே திளைப்பார்கள். ஓரளவுக்கு நெருங்கிப் பழகிய பிறகு தெரியாத நபரைவிட, தெரிந்த நபரே நல்லது என்று பெண்கள் உணர்கிறார்கள். நண்பர்களிடையே காதல் பூப்பதற்கு அடிப்படை நான்கு காரணங்கள்.

முதல் காரணம்,:- நெருக்கம். மிக அருகருகே இருப்பதால், அடிக்கடி பார்ப்பதால், பேசுவதால் காதல் ஏற்படும்.

இரண்டாவது காரணம்:- நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான கருத்து ஒத்திசைவால் ஏற்படும் காதல். பரஸ்பர உதவி, அக்கறை காரணமாக ஏற்படுவது.

மூன்றாவது காரணம்:- உதாரணத்துக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம்.

நான்காவதாக:- இரு பாலினத்தவரும் எதிர் பாலினத்தவர் மீது வைத்திருக்கும் உடல் ரீதியான கவர்ச்சி, அழகுணர்ச்சி ஆகிய காரணங்கள். பொதுவாக ஆண்கள், அழகான பெண்களைத்தான் காதலிப்பார்கள்.
நேர் எதிராகப் பெண்களோ, தன்மேல் அன்பாக, அக்கறையாக, மனம் குதூகலிக்கப் பேசுபவனாக, தனக்குப் பாதுகாப்பாக இவன் இருப்பான் என்று எந்த ஆணை நினைக்கிறார்களோ அவர்களைத்தான் காதலிப்பார்கள்.
பெண்ணின் அழகைப் பார்த்து ஆணுக்குக் காதல் அரும்ப, ஆணின் அரவணைக்கும் குணமே பெண்ணுக்குக் காதலைத் தூண்டும் சக்தியாக இருக்கிறது. ஆண் இன்னொரு ஆணுடன் பழகும்போது நட்புக்காகப் பணம், வேலை ஏன் உயிரையே கொடுக்கலாம்.
பெண் அதிகபட்சமாகத் தன்னையே கொடுக்க முடிவெடுப்பாள். வசதியான பெண், நன்றாகப் படிக்கும் ஏழைப் பையனுக்கு உதவ வேண்டும் என்று பரிதாபத்தில் பழகினால்கூட, ‘உன் மேல இவ்ளோ அன்பு வெச்சிருக்காளே.
மச்சான், இது சத்தியமா காதல்தான்டா’ என்று அவனது நண்பர்களின் தூண்டுதலை அவனே நம்பத் தொடங்குவான். இது பெண்ணுக்குத் தெரிந்தால் அவளுக்குப் பேரதிர்ச்சிதான் மிஞ்சும். ஆண் காதல் சொல்லி பெண் ஏற்கவில்லை எனில், சொறி…இனிமே ஃப்ரெண்ட்ஸாவே பழகலாம்’ என்று சொல்லி மறுத்தாலும், அது அவன் அடிமனதில் வண்டல் மண் போலத் தேங்கி இருக்கும்.
அடுத்தடுத்து தொடர்ச்சியாகத் தன் காதலை சமயம் கிடைக்கும்போது எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். இறுதி வரை ஆணின் எண்ணம் மாறாது. ஆண் – பெண் நட்பு கம்பி மேல் நடப்பதற்குச் சமம். அந்த நட்பில் அதிகம் பேசப் பேச நெருக்கம் அதிகமாகும்.
நட்பு, காதலாகும் என்ற உண்மையை, அதில் இருக்கும் நல்லது கெட்டதுகளை உணர்ந்து, இறுதி வரை நட்பாகவே இருக்கலாம். அல்லது அந்த நட்பு காதலாக உருமாறும் சமயம் அது உங்களுக்கு உண்மையாக, நம்பிக்கையான வாழ்நாள் துணையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு தொடரலாம்!” ஆதலினால், நட்பின் கணவாய் வழியே காதல் தேசம் புகுதல் சரி/தவறு. உங்கள் தேர்வு எது என்பது உங்கள் கையில்!

No comments:

Post a Comment