Saturday, February 26, 2011

வானில் வண்ணங்கள் தோன்றினால் பூமிக்கு ஆபத்தா? தப்பிக்க வழி என்ன?


சூரியவெப்பக் காற்றின் மூலம் வானில் தோன்றும் பல்வேறு வண்ணங்களால், பூமிக்கு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தப்பிக்க வழி என்ன என விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

சூரியனின் வெப்ப அளவு 1750 ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகளால் அளவிடப்பட்டு வரைபடமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருப்பதாக, கணக்கெடுப்புகள் உறுதி செய்துள்ளன. தற்போது 23வது முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சூரியன் மிக அமைதியாக இருப்பதாக படங்கள் தெரிவிக்கின்றன. 11 ஆண்டில் முதல் ஐந்தாண்டுகள் மிதமாகவும், ஆறாம் ஆண்டிலிருந்து வெப்பத்தால் ஏற்படும் சூரியகாற்றின் அளவு உச்சமாகவும் இருக்க வேண்டும். கடைசியாக 2001 ல் சூரியகாற்று அதிக உச்சத்தில் இருந்தது. தற்போது நடக்கும் 23வது சுற்றில் 2005 முதல் 2009ம் ஆண்டு வரை சூரியன் அமைதியாக இருக்கிறது. எனவே 24வது சுற்றில் சூரியன் மூலம் பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமானது பேராற்றலாக சூரியனிலிருந்து பொங்கி பரவும். இவை சிலநேரங்களில் 50ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு "பிளாஸ்மா' எனும் எரிமலை குழம்பு போல பரவும். ஆனால், சூரியனிலிருந்து விடுபட முடியாமல் அதைச் சுற்றி வட்ட வளையமாக மாறி விடும். இதிலிருந்து வெளியேறும் வெப்பமான ஜூவாலை நிரம்பிய காற்று (சேலார் வின்ட்) பூமியை தாக்க முற்படும். பூமியின் அமைப்பே இயற்கையாக நம்மை பாதுகாக்கிறது. பூமியில் உள்ள மின்காந்த கோளம் (மாக்னடோ ஸ்பியர்) சூரியகாற்று பூமிக்குள் வராமல் தடுக்கிறது. கடந்த 150 ஆண்டுகளில் பூமியின் வலிமை 10 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் சூரியகாற்று பூமிக்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு ஊடுருவினால், அவை மின்சாரத்தை நேரடியாக பாய்ச்சக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை. அவ்வாறு ஏற்படுவதற்கு முன், வானம் மிக வெளிச்சமாகவும், இரவில், அதிகாலையில் பச்சை, நீல வண்ணங்களும் தெளிவாக தெரியும்.

கடந்த 1989ல் கனடாவின் "கியூபெக்' பகுதியில் இவ்வகை மின்சாரம் (ஜீரோ கரண்ட்) பாய்ந்து "டிரான்ஸ்பார்மர்' செயலிழந்தது. அப்பகுதியில் பச்சை, நீல வண்ணங்கள் (ஆரோமா) காணப்பட்ட பிறகே, இச்சம்பவம் நிகழ்ந்தது. தற்போது புவியின் மின்காந்த கோளத்தின் பலவீனமடைந்த பகுதி வழியாக சூரியகாற்று ஊடுருவியுள்ளது. வரும் 2012, டிச., 21ம் தேதி, 24வது முறையாக 11ஆண்டு சுழற்சி ஆரம்பிக்கிறது. கடந்த செப்., 2010ல் எடுக்கப்பட்ட படங்களில், சூரியனின் பேராற்றல் அதிகமாகி உள்ளதாக தெரிகிறது. எனவே பூமிக்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வானில் வெளிச்சம் அதிகமாகி, வண்ணங்கள் தோன்றினால் சூரிய சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ளது. சூரியனின் வெப்பக்காற்று நேரடியாக பூமியை தாக்கும் போது முதலில் "டிரான்ஸ்பார்மர்கள்' தான் பாதிக்கப்படும். இவற்றை சரிசெய்ய பல மாதங்களாகலாம். இதனால் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். இரவில் இருளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முக்கியமாக மனிதநேயம் குறைந்து விடுவதால், சண்டை, சச்சரவுகளாலும் அழிவு ஏற்படும். கடலில் மீண்டும் சுனாமி உருவாகும். பூமியின் தட்டடுக்குகளில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் பூகம்பம் ஏற்படும். இவையெல்லாம் உறுதியாக வரும் என்று கூறமுடியவில்லை.

அழிவை தடுப்பதற்கு தற்போதைய ஒரே வழி, வானில் வண்ணம் தோன்றினால், அனைத்து டிரான்ஸ்பார்மர்கள், சாட்டிலைட் இணைப்புகளை நிறுத்திவிட வேண்டும். வெப்பக்காற்றின் தாக்கம் குறையும் வரை இவ்வாறு செய்தால் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். இதுகுறித்து காந்திகிராம் கிராமிய பல்கலை இயற்பியல் பேராசிரியர் சிவராமன் கருத்தரங்கில் கூறுகையில்,"" விஞ்ஞான ஆய்வுகளின் கூற்றும், புராணத்தில் கூறப்படும் கதைக்கூற்றும் ஒரே மாதிரியாக உள்ளது. இது அப்படியே நடக்கும் என்று கூறமுடியாது. சூரியனின் வெப்பக்கதிர்களை தொடர்ந்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், சூரியகாற்றின் பேராற்றலை கண்டுபிடித்துள்ளனர். 1989லிலேயே இப்பிரச்னை தோன்றியதால், அதை சமாளிக்கும் வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இதுகுறித்து பயப்படவும் வேண்டாம்,'' என்றார்.

No comments:

Post a Comment